மிக அருமையான படைப்பு கியாட்டீயளா. மக்களே!, குமரித்தமிழானது நம்ம மக்களது நாக்குல தொடர்ந்து இருக்க இம்மாதிரியான படைப்புகள் மிகமிக முதன்மையான தேவைகளாகும்ணி நல்லா புரிஞ்சிக்கங்க. தொ.கா, திரைப்படம் போன்ற ஊடகங்களின் தொடர்த்தாக்கத்தால், குமரிமக்கள் தங்களது இனிமையான வழக்குத்தமிழை மறந்து சென்னையைச்சார்ந்த ஒரு தமிழொலிப்புக்கு அறிமுகமாகி வருகின்றனராக்கும். அதுமட்டுமல்லாமல் பல வீட்டில் தங்களது குழந்தைகளுக்கு குமரிவழக்குத்தமிழை அறிமுகப்படுத்தவே "கூச்சப்பட்டும்" அவலம் உருவாகியுள்ளது. அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஊடகத்தில் புழங்கும் தமிழையோ ஆங்கிலத்தை மட்டுமோ அறிமுகப்படுத்திவருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம்ணி சென்னாக்ய, எந்த ஒரு திரை, தொ.கா போன்ற எந்தவொரு ஊடகங்களிலும் குமரித்தமிழானது காட்டப்படுவதே இல்லை. பாத்தீங்கனாக்ய இஞ்ஞாலத்திலுள்ள தமிழர்களுக்கு ஈழத்துத்தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ் போன்றவை நன்கு அறிமுகமாகியுள்ளது. இந்ந நிலையில் இவ்வகையான படைப்புகள் குமரித்தமிழின் அழகிய இயல்பை இஞ்ஞாலத்துத் தமிழர்களுக்கு அறிமுகம்செய்துவைக்கவும் குமரித்தமிழை நெடுங்காலம் வாழவைக்கவும் ஒரு ஊன்றுகோலாக இருகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நமது மாவட்டத்துக் குழந்தைகளுக்கு எந்தமொழியைச் சொல்லிக்கொடுத்தாலும் நமது குமரிமாவட்டத்துத் தமிழையும் செந்தமிழையும் பிறமொழி கலவாது சரளமாகப் பேசுவதும் *தமிழ் எழுத்துக்களில்* எழுதுவதும் எப்படி என்பதையும் அதிலுள்ள நுணுக்கங்களையும் கட்டாயம் நாள்தோறும் சொல்லிக்கொடுக்கவேண்டும். தமிழர்கள் எங்கு இருந்தாலும் காலத்தால் ஒரு வட்டார வழக்கை உருவாக்கிக்கொள்வர். இவ்வட்டார வழக்குகள் எல்லாம் நம் தாய்த்தமிழ்மொழியின் அங்கங்களே. இந்த வட்டாரவழக்குத் தமிழ்கள்தான் காலத்தின் தேவைக்கேற்ப புதுச்சொற்களை உருவாக்கி மக்களிடையே புழக்கப்படுத்தி அதன் அடுத்தகட்டமாக அச்சொல்லை செந்தமிழினுள் ஏற்றிவரும் பணியை காலங்காலமாகச் செய்துவந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உங்கள் அரும்பணி மேன்மேலும் சிறக்க உளம்நிறை வாழ்த்துக்கள்... நன்றி thaache.blogspot.com/2020/09/blog-post.html