கோயிலைக் கண்டால் இறைவனைப் பற்றிய எண்ணம் மனத்தில் எழுகிறது. விழிப்புணர்ச்சிஉண்டாகிறது. எங்கே அவரைப் பற்றி பேசுகிறார்களோ அங்கே அவர் எழுந்தருள்கிறார். அங்கே எல்லா தீர்த்தங்களும் கூடுகின்றன. இப்படிப் பட்ட இடங்களைப் பார்க்கும் போது மனத்தில் இறைவனை ப்பற்றிய எண்ணங்களே எழுகின்றன.
ஒரு பக்தன் கருவேல மரத்தைக் கண்டதும் பரசவ நிலையை அடைந்தான்! ஏனெனில் அந்த மரத்திலிந்து தான் ராதாகாந்தர் கோயில் தோட்டத்திற்கான கோடாரியின் கைப்பிடி செய்யப் பட்டிருந்தது.
மற்றொரு பக்தன் தனது குரு வசிக்கும் பகுதியைச்சேர்ந்த மக்களைக் கண்டாலே பரவச நிலை அடைந்து விடுவான். அவ்வளவு குருபக்தி!
மேகத்தையோ, நீலத் துணியையோ, படத்தையோ கண்டால் போதும், ராதையிடம் கிருஷ்ணனின் உணர்வு கிளர்ந்தெழுந்துவிடும். பித்துப் பிடித்தவளைப்போல், எங்கே என் கிருஷ்ணன்? என்று இங்குமங்கும் ஏக்கத்துடன் தேடுவாள்.
ஜானகி கோஷால்-
பித்து ப் பிடிப்பது நல்லதல்லவே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன அப்படிச் சொல்கிறாய்? அது என்ன உலகியல் பொருட்களை நினைத்து அறிவு மயங்குகின்ற பித்தா? பகவானைச் சிந்திப்பதால் ஏற்படுகிற பித்து இது? பிரேம ப் பித்து, ஞானப் பித்து, என்றெல்லாம் நீ கேட்ட தில்லையா?
பிரம்ம பக்தர்-
இறைவனை எவ்வாறு பெறலாம்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவரை நேசிக்க வேண்டும். ஆமலும் இறைவனே உண்மை, உலகம் நிலையற்றது என்பதை இடை விடாமல் ஆராய வேண்டும். அரசமரம் தான் உண்மை, அதன் பழம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே.
பிரம்ம பக்தர்-
காமம், கோபம், முதலிய பகைவர்கள் உள்ளனரே, என்ன செய்வது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அந்த ஆறு பகைவர்களின் போக்கையும் இறைவனிடம் திருப்பிவிடு.ஆன்மாவுடன் கலந்து ஆனந்தம் அடை- இது தான் காமம். இறைவனை அடையும் வழியில் நம்மைத் தடுப்பவர்களிடம் கோபம் கொள். அவரை அடைய வேண்டும் என்ற பேராசை கொள். எனது, எனது, என்று கூற வேண்டுமானால் கடவுளையே அதற்கு அடிப்படையாக்கிக்கொள். உதாரணமாக எனது ராமன்” எனது கிருஷ்ணன்” என்று சொல். அகங்காரம் கொள்ள வேண்டுமானால் விபீஷணனைப்போல், ”நான் ராமனை வணங்கியுள்ளேன். இந்தத்தலைவேறு யாரையும் வணங்காது” என்று அகங்காரம் கொள்.
பிரம்ம பக்தர்-
எல்லாம் இறைவன் செயலாகுமானால் பாவத்திற்கு நான் பொறுப்பாளி அல்லவே?
ஸ்ரீராமகிருஷ்ணன்-(சிரித்துக் கொண்டே)
துரியோதனனும் இப்படித்தான் சொன்னான். த்வயா ஹ்ருஷீகேச ஹ்ருதிஸ்தி தேன, யதா நியுக் தோஹஸ்மி ததா கரோமி” என்றான் அவன்.
இறைவன் தான் எல்லாம் செய்பவர், என்னால் ஆவது, ஒன்றுமில்லை” என்ற திட நம்பிக்கை இருப்பவனால் பாவச்செயல்கள் செய்ய முடியாது. நாட்டியம் ஆடுவதை க் கற்றுத் தேர்ந்தவள் தாளம் தவறி ஆடவே மாட்டாள். உள்ளம் தூய்மை அடையாவிட்டால் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையே வராது.
பிறகு குருதேவர் பூஜையறையில் இருந்தவர்களைப் பார்த்துப் பேசலானார்.
இடையிடையே இவ்வாறு ஒன்று கூடி இறைவனைப் பற்றி பேசுவதும், அவருடைய பெயரையும் மகிமைகளையும் பாடுவது மிகவும் நல்லது. ஆனால் உலகியல் மனிதர்களின் பக்தி கண நேரத்திற்கே. பழுக்க க் காய்ச்சிய இருப்பின் மீது விழுந்த நீர்த்துளி எவ்வளவு நேரம் தங்கியிருக்குமோ, அவ்வளவு நேரத்திற்கே.
அப்போது வழிபாடு ஆரம்பமாகிறது. பிரம்ம சமாஜ பக்தர்கள் மேடைக்கருகில் கூடியிருந்தவர்கள். பிரம்ம சமாஜப்பெண்கள் சிலர் அறையின் வடக்குப் பகுதியில் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் கைகளில் பாட்டுப் புத்தகங்கள் இருந்தன.
.மன ஏக்கம் இருக்குமானால் எல்லா வழிகளாலும் இறைவனை அடையலாம். ஆனால் நிஷ்டை இருப்பது நல்லது. இந்த நிஷ்டா பக்திக்கு அவ்யபிசாரிணீ பக்தி என்றும் ஒரு பெயரும் உண்டு. ஒரு மரம் கிளைகள் இல்லாமல் நேராக மேல் நோக்கிச்செல்வது போன்றது நிஷ்டா பக்தி. மரம் பல்வேறு கிளைகளுடன் இருப்பது போன்றது வியபிசாரிணீ பக்தி. கோபியரிடம் நிஷ்டா பக்தி இருந்தது. கழுத்தில் மஞ்சள் நிற மாலை அணிந்த, தலையில் மயிலிறகு சூடிய, இடைச் சிறுவனான பிருந்தாவனக் கிருஷ்ணனைத் தவிர வேறு யாரையும்அவர்கள் நேசிக்க மாட்டார்கள். தலையில் கிரீடத்துடன் அரசனாக மதுராவில் கிருஷ்ணனைக் கண்டதும் கோபியர் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். யாரடி இவன்? இவனுடன் பேசி நாம் இன்னொருவனை நாடியவர்களாகி விடுவோமோ? என்று பேசிக் கொண்டனர்.
மனைவி கணவகு்குச் செய்யும் சேவையும் நிஷ்டா பக்தி தான். மைத்துனனுக்கும் மற்ற உறவினர்களுக்கும் அவள் உணவு பரிமாறுகிறாள். கை கழுவ தண்ணீர் கொடுக்கிறாள். என்றாலும் கணவனிடம் அவளது உறவு தனிப்பட்டது. இது புான்றே ஒருவன் தன் மதத்தில் ஈடுபாடு கொள்ளலாம். அதற்காக மற்ற மதங்களை வெறுக்க வேண்டியதில்லை. மாறாக, பிற மதத்தினரிடம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டும்.
23 май 2021