#KolaruPathigam | #ThirumaraikkaduTemple | #PanniruThirumurai | @PanniruThirumurai
02.085 கோளறு திருப்பதிகம் | திருமறைக்காடு | வேயுறு தோளிபங்கன் விடமுண்ட | திருஞானசம்பந்தர் தேவாரம்
கிரகதோஷங்கள் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம். திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு நீங்கப் பாடிய கோளறு பதிகம்.
“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞானசம்பந்தர். கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் நிகழும் போது இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது ஞானசம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை பாராயணம் செய்யலாம்.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்
திருமுறை : இரண்டாம் திருமுறை 085 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார்
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று திருமறைக்காடு. அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது. சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்தபோது சிவ சமயத்தை மீட்டெடுக்க பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும். என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள்.
அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார். அப்போது, அப்பர் சுவாமிகள் - இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. - என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள். மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - திருஞானசம்பந்தப் பெருமான் அருளியது இப்பதிகம்.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட
கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (01)
என்பொடு கொம்பொடு ஆமை இவை
மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி
வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு
ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (02)
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது
பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (03)
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு
தூதர் கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (04)
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள்
தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்
மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (05)
வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி
வந்து என் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை
கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (06)
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான
பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (07)
வேள்பட விழிசெய்து அன்று விடைமேல்
இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி
என் உளமே உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்
தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (08)
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு
தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (09)
கொத்தலர் குழலியோடு விசையற்கு
நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல்
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும்
அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ..... (10)
தேனமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல்
துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை
வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள்
வானில் அரசாள்வர் ஆணை நமதே. ..... (11)
பதிகப் பலன் : தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன் முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
27 авг 2024