சிலப்பதிகாரத்தில் கூறும் மாதவியின் பதினோரு வகை ஆடல்களை உருவாக்குவதற்கான தடயங்களைத் தேடிச் சிலப்பதிகார மூலநூலிலிருந்தும், பரதசேனாபதியம் ஆடல் இலக்கண நூலில் இருந்நும், அடியார்க்கு நல்லார் உரையினையும், சிலப்பதிகாரப் பனுவலை பற்றி ஆராயப்பட்ட ஆராய்ச்சியாளர்களது கருத்துக்களையும், தமிழிசைக் கலைக்களஞ்சியம், இசை நடன கலைக்களஞ்சியம், சிலப்பதிகார அரங்கேற்று காதையும் இசை நாட்டிய கலைச் சொற்களும், போன்ற பல்வேறு நூல்களிலிருந்தும் ஆராயப்பட்டு ஒரு ஆய்வுக்குரிய ஆற்றுகையாக இம் மாதவியின் பதினொரு வகை ஆடல்களை நெறிப்படுத்தியுள்ளேன்.
ஒரு ஆடல் அரங்கேறும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை சிலப்பதிகாரம் கூறியதுபோல அரங்க எழினி முதற்கொண்டு ஆற்றுகை சிறப்பு பெற குயிலுவக் கலைஞர்களின் பங்களிப்பினை ‘’குழல்வழி யாழே’’ என்று தொடங்கும் பாடலில் இருந்து ஆதார சுருதியாக குழலை நிலைநிறுத்தி, தொடர்ந்து யாழ், தண்ணுமை, இசையோன் என பக்கவாத்திய கலைஞர்களை சீர்பெறச்செய்து ‘’மேளப்பிராப்தி’’ என்று சொல்லப்படுகின்ற மரபினை எடுத்துக்காட்டி உள்ளேன்.
‘’பண்ணியம் வைத்து ஆனைமுகன் பாதம் பணிந்து நாள்’’ என்னும் பாடல் சிலப்பதிகாரத்தில் விநாயகப் பெருமானுக்கு வழிபாடு இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதவிடத்து அடியார்க்கு நல்லாரின் உரையினை எடுத்துக்காட்டி, நாம் எவ் நிகழ்வினையும் ஆரம்பிக்கும்போதும் விநாயகப்பெருமானின் ஆசியுடன் ஆரம்பித்தால் அந்நிகழ்வு வெற்றிபெறும் என்பதற்காக கடவுள் வாழ்த்துப் பாடலாக இப்பாடலை தெரிவு செய்துள்ளேன்.
‘’மதலை மாகோல் கைவலம் தம்மின்’’ மதலை மாகோல் என்பது பிறப்புணர்த்தும் கோல், கூத்தர் இனத்தில் பிறந்தவர் என்பதன் அடையாளம். அதன் மரபுதான் இன்றும் கட்டியக்காரன் கையில் கோல் கொண்டு வருகின்றமையை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘’ஒத்து ஆடிய பின்னர் அல்லது ஒரு உருகாட்டுதல் வழக்கல்ல’’ இங்கு உருக் காட்டுதல் என்பது அரங்கில் மாதவி தன் வலது காலை முதலில் வைத்து அரங்கில் புகுந்து திரைநீக்கி தன் உருவை காண்பித்து வணக்கத்தை செலுத்தும் முறையினையும் காண்பிக்கப்படுகின்றது.
பாரதி ஆடிய பாண்டுரங்க ஆடலும் என்னும் பகுதியில் பாண்டுரங்க ஆடலை சிவன் ஆடியதாக அறிந்துள்ளோம். இதில் அடியார்க்குநல்லார் பாரதி என்பதற்கு கூத்தன், நடன், நடிபொருளாகக் காட்டி மாதவி ஆடி உள்ளதாக சொல்லப்பட்ட தமிழ் இலக்கியத்தில் நாட்டிய வரலாறு எனும் நூலில், மாதவி அச்சம் தரக்கூடிய காளி உருவம் தாங்கி அகோரத் தாண்டவம் ஆடி தன் ஆடற் புலமையை வெளிப்படுத்தி உள்ளதை காட்டியுள்ளதாக கூறியதற்கு இணங்கத்தான் பாண்டுரங்கா ஆடல் ஆடப்பட்டுள்ளது.
மாதவி தன் பதினொரு வகை ஆடலில் எவ்வாறு அபிநயம் பிடித்து இருப்பாள் என்பது எமக்குத் தெரிந்திருக்காத போதும் சிலப்பதிகாரத்தில் உள்ளவாறு பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை, வட்டமாக சுற்றி வந்து வைகாச ஸ்தானத்தில் நிற்றல், போன்ற அங்க அசைவுகளையும் இவ்வாடலில் புகுத்தியுள்ளேன்.
ஒரு அரங்கேற்ற நிகழ்வின் இறுதி நிகழ்வாக மங்களகரமாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இணங்க மங்கல வாழ்த்துப் பாடலை இறுதியில் காண்பித்து நிகழ்வினை நிறைவு செய்துள்ளேன்.
‘’அறையில் ஆடி அம்பலத்தில் ஆட வேண்டும்’’ என்பார்கள் அதுபோல தற்கால சூழ்நிலையில் மாணவர்களை நேரில் சந்திக்காமல் இணையவழி ஊடாக இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆற்றுகைப் படுத்தி, அவர்களது வீடுகளில் ஒளிப்பதிவு செய்து, அனுப்பி உள்ளதை ஒன்றுசேர்த்து அரங்கிற்கு ஏற்றியுள்ளேன்.
இவ்வாறு பாடல்களையும் பக்கவாத்திய கலைஞர்களுக்கு அனுப்பி தனித்தனியாக வாத்தியங்களை வாசித்து அதனையும் ஒலிப்பதிவு செய்து பின்னர் இவ்விரண்டு ஒலி-ஒளி அமைப்பினையும் ஒருங்கிணைத்து இன்று உங்கள் முன் காட்சிப்படுத்தி உள்ளேன்.
‘’எளிமையுடன் தொடக்கப்படும் எதுவும் முயற்சி உடமையினால் அருமை உடையதாகி உயர்ந்து நிற்கும்’’ என்பார்கள். அதுபோல் இன்று மாதவியின் பதினொரு வகை ஆடல்களை ஆராய்ச்சிக்குட்படுத்தி ஆடல் ஆக்கம் செய்து ‘’தமிழ் ஆடல்’’ என்னும் இக் கைவிளக்கை ஏற்றியுள்ளேன்.
அறிவுலகம் அவ்வப்போது இதனை துலக்கவும், தூண்டியும், கருத்து நல்கி விமர்சிக்க வேண்டுகின்றேன். என் சிற்றறிவில் விளைந்த சிறு விதை இது. இந்த விதையின் பரவலில் பெருக்கத்தின் விரிவில் தமிழ் ஆடல் உருவாகுமாயின் மிக மனம் மகிழ்ந்து புலகாங்கிதம் அடைவேன்.
12 сен 2024