Swami Kumaragurubarar's Sagala Kalaa Valli Maalai set to music by Kalaimamai Thiru. T.R.Paapa and sung by Padmashri Dr. Sirkali Govindarajan and Dr. Sirkali G. Sivachidambaram
1)வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க - காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான். ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி. ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா? காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா? 2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே! கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே! ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கரும்பாக இனிப்பவளே! நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் - அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி) பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக! ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அலங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!
3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே - எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே! உளம் கொண்டு - விருப்பம் கொண்டு களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே சிந்தக்கண்டு - பொழியக்கண்டு அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ - உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே! நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக! 4)தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே - கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! செந்நாவில் நின்று - நல்ல நாவினின்று தூக்கும் பனுவல் - அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் துறைதோய்ந்த கல்வியும் - எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் - சொற்சுவை நிரம்பிய வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!
Sir,Thankyou for having given the meaning to this great poem by SRI KUMARA KURUBARA SWAMIKAL.With your meaning,I've easily recited this song.GOD BLESS YOU & ALL AT YOUR FAMILY.
Dears, I may be excused for giving late comment on this song. From my experience it is the only best song for any human being to chant for education . You will definitely get the best feeling. We used to visit this temple whenever Amma Saraswathi Calls. Best wishes for everyone and everytime..
5)பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. நெடுந் தாள் கமலத்து - (திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த) நீண்ட தண்டினைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அஞ்சத்துவசம் உயர்த்தோன்- அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும் செந்நாவும் - சிறந்த நாவினையும் அகமும் -மனதினையும் வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்- ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் பொற்பாத பங்கேருகம் - பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ? தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்! திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டினைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே! செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ? பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும் உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர். 6)பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. பதம் பிரித்து அமைந்த பாடல்: பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! எழுதா மறையும் - எழுதாமறையாகிய வேதத்திலும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் -வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் - பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்கள் கொண்டு கவிகள் (நூல்கள்) எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே! பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்கள் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!
9)சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே! நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி - நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரசன்னம்- அரச அன்னமும் நாண-நாணும்படி நடை கற்கும் பதாம்புயத் தாளே-அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே சொற்கும் பொருட்கும் -சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் - உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக! 10) மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே! பதம் பிரித்து அமைந்த பாடல்: மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! படைப்போன் - படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பல்கோடி உண்டேனும் - பலகோடி இருந்தாலும் விளம்பில்- தெளிந்து கூறில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ் மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும் பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக! படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே! மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக! - குமரகுருபர சுவாமிகள்
தமிழ்ச்சிங்கம்,மகான் குமரகுருபரர் வரலாறு பிறந்து 5 வயது வரை பேச்சு வரவில்லை என்பதால், குழந்தையை திருச்செந்தூருக்கு, பெற்றோர் அழைத்துச் சென்று வழிபட்டனர். பேச்சு வந்தது. முருகன் அருளால் சிறுவயதிலேயே கந்தர்கலி வெண்பா பாடினார். பின்னாளில் காசி நகருக்குச் சென்றார். காசியை ஆண்ட முஸ்லிம் நவாபிடம், தனக்கு ஒரு மடம் கட்ட அனுமதி வேண்டி,அரண்மனைக்குச் சென்றார்.குமரகுருபரருக்கு உட்கார இருக்கையும் கூடத் தரவில்லை. நவாப் உருதுமொழி பேச, மொழிபெயர்த்த விஷயம் என்னவென்றால், கருடன் காசியில் பறந்தால் வேண்டியபடி மடம் கட்டிக்கொள்ளலாம் என்றான். திரும்பிச்சென்ற குருபரர், அடுத்தநாள், சிங்கக்கூட்டம் புடை சூழ, ஆண்சிங்கம் ஒன்றின்மீது அமர்ந்துஅரண்மனைக்குள் பிரவேசித்தார். உண்மையானசிம்மாசனத்தில்அமர்ந்தபடி குருபரர், நவாபுக்குத் தெரிந்த உருது மொழியில் நவாபிடம் உரையாடினார்.கருடனையும் வரவைத்துக்காட்டினார். இதைக்கண்டுஅதிர்ந்த நவாப்,எந்தஅளவு வேண்டுமானாலும் நிலத்தை எடுத்து மடம் கட்டிக்கொள்ளலாம் என்றான். இன்றும் காசியில் குமரகுருபரர மடம் உள்ளது. ஒரே நாளில் எப்படி உருது மொழியில் பேசினார்? சரஸ்வதிதேவியைத் துதித்து" சகலகலாவல்லி மாலை" பாடினார். "சொல்விற்பனமும் அவதானமும், கல்வி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்" விளக்கம்: வாக்குப் பலிதமும், ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்யும் அவதானக் கலையும்,பலமொழிகள் பேசும் வல்லமையும் தருவாய். குருவே சரணம்.