#Partnership இலங்கை அதிபர் ஆனார் அனுரா
இந்தியா உடனான உறவு
இனி எப்படி இருக்கும்?
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயக்க வெற்றி பெற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அனுரா திசநாயக்கவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதிபராக பதவியேற்ற பின் பேசிய அனுரா, எனக்கு ஓட்டு போடாத மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையிலும் பணியாற்றுவேன். எங்கள் முன்னாள் உள்ள சிக்கலான பணியை புரிந்து கொண்டு, மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வேன்.
சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்துக்கான அடித்தளம் என்று கூறினார். அதிபர் அனுரா திசநாயக்கவுக்கு பிரதமர் மோடி, உட்பட பல தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இடதுசாரி கட்சியை சேர்ந்த ஒருவர் இலங்கையின் அதிபர் ஆவது இதுவே முதல்முறை. இலங்கை அதிபரான அனுரா தமது இடதுசாரி கொள்கைகளுடன் ஒத்துபோகும் சீனாவுடன் நெருக்கம் காட்டலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இந்தியா உட்பட அனைத்து வல்லரசுகளுடனும் நல்ல உறவை தொடரவே அனுரா விரும்புவதாக அவரது JVP கட்சி கூறுகிறது.
கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்திருந்த அனுரா திசநாயக்க, இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையின் கடல், நிலம் மற்றும் வான்வெளியை எந்த நாடும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என கூறியிருந்தது இந்தியாவுக்கு முக்கியமானது.
அதே போல், இலங்கை தனித்து இருந்தால் பொருளாதார இஸ்திரதன்மை பெற முடியாது; இந்தியா போன்ற வலிமையான நாட்டிடம் இருந்தால் தொழில்நுட்பம் போன்ற பல நன்மைகளை பெற முடியும் என அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டம் நாட்டின் ஆற்றல் இறையாண்மையை மீறுவதாகவும், சுற்றுச்சூழல் பிரச்னையை எழுப்புவதாக வெளிப்படையாக அனுரா குற்றம்சாட்டி உள்ளார்.
இதேபோல், ஹம்பந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகர திட்டம் போன்ற சீனாவின் முதன்மை திட்டங்களை நிறைவேற்றுவதில் ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்தும் இந்திய அதிகாரிகளிடம் அனுரா கவலை தெரிவித்து இருந்தார்.#Anurakumardissanayake #srilankanpresident #India #PMModi
22 сен 2024