ஸ்ரீராமகிருஷ்ணர் உவமைகள் மூலம் அறிவுரை-
யோகியின் மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும். எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும். பார்க்கும்போதே அவனை அடையாளம் கண்டுகொள்ளலாம். அவனது கண்கள், முட்டையை அடைகாக்கும் பறவையின் கண்கள்போல் எங்கேயோ பார்த்தவண்ணம் அகலத்திறந்திருக்கும்.மனம் முழுக்க முழுக்க முட்டையின் மீது நிலைத்திருக்கும். கண்களில் ஒரு வறட்டுப்பார்வையிருக்கும்.
..
ராவண வதம் முடிந்தது? லட்சுமணன் ஓடிச்சென்று ராவணனைப்பார்த்தான். அவனது உடம்பில் துளை படாத இடம் ஒன்று கூட இல்லை. உடனே ராமரிடம், ராமா உன் அம்பின் மகிமைதான் என்ன?
ராவணனின் உடலில் அம்பு துளைக்காத இடம் ஒன்று கூட இல்லையே! என்று சொன்னான். அதற்கு ராமர், தம்பி! நீ பார்க்கும் துளைகள் அம்பால் ஏற்பட்டவை அல்ல. புத்திர சோகத்தால் ராவணனின் எலும்புகள் நொறுங்கிப்போயிருக்கின்றன. அந்தத் துளைகள் அவனது புத்திர சோகத்தின் சின்னங்கள். சோகம் எலும்புவரை சென்று துளைத்திருக்கிறது” என்று கூறினார்.
ஆனால் இந்த அனைத்தும் நிலையற்றவை. வீடு, மனைவி, மக்கள், எல்லாம் இரண்டொரு நாட்களுக்கு மட்டுமே, பனைமரம் தான் உண்மை, இரண்டொரு பனம் பழங்கள் உதிர்ந்துவிட்டன. இதற்கு வருத்தம் ஏன்?
..
படைத்தல் அழித்தல், காத்தல் ஆகிய மூன்று தொழில்களைக் கடவுள் செய்கிறார். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்துவிடும். எதுவும் மிஞ்சாது. அம்பிகை அடுத்த படைப்பிற்கான விதையைச் சேகரித்து மட்டும் வைக்கிறாள். புதிய படைப்பின் போது அவற்றை வெளியே கொண்டு வருகிறாள்.
பாட்டிகள் கண்டதையெல்லாம், ஒரு கலயத்தில் போட்டு வைப்பது போல் (எல்லோரும் சிரித்தனர்). அந்தக் கலயத்தில் வெள்ளரி விதை, கடல் நுரை, வாயு மாத்திரை எல்லாம் இருக்கும். சிறியபெரிய பொட்டலங்களாகக்கட்டி வைத்திருப்பாள்.
..
ஆதி சங்கரர் பிரம்மஞானி என்பது உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அவரிடம் வேற்றுமை பாராட்டும் மனநிலை இருந்தது.
அத்வைதத்தில் அவ்வளவு நம்பிக்கை இருக்கவில்லை. ஒரு சமயம் அவர் கங்கையில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.
ஒரு சண்டாளன் மாமிசத்தைத்தூக்கிக்கொண்டு எதிரே வந்தான். அவனது உடம்பு சங்கரரின் மீது பட்டுவிட்டது, டேய், நீ என்னைத் தொட்டு விட்டாயே! என்று கூவினார் சங்கரர்.
அதற்கு சண்டாளன், சுவாமி நீங்களும் என்னைத்தொடவில்லை, நானும் உங்களைத்தொட வில்லை.சுத்த ஆன்மா யாரோ அவர் உடல் அல்ல, பஞ்சபூதங்கள் அல்ல, இருபத்து நான்கு தத்துவங்களும் அல்ல, என்றான். அப்போது சங்கரருக்கு உண்மை விளங்கியது.
..
ரகு கணன் என்ற மன்னனின் பல்லக்கைச் சுமந்து சென்றபடியே ஜடபரதர் ஆன்ம ஞானம் பற்றிபேசினார்.
உடனே மன்னன் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி வந்து, தாங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு ஜடபரதர், நான் இது அல்ல, இது அல்ல. நான் சுத்த ஆன்மா” என்று கூறினார்.
தான் சுத்த ஆன்மா என்பதில் ஜடபரதருக்குப் பரிபூரண நம்பிக்கை இருந்தது.
நானே அவன், நான் சுத்த ஆன்மா-இது ஞானிகளின் கருத்து.
..
அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். சமையற்காரன் அங்கு வந்து அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு, அரசே நீங்களும் நானும் சமம். என்று கூறுவானானால், உலகம் அவனைப் பைத்தியம் என்று கூறும்.
ஆனால் சமையற்காரனின் சேவையைக்கண்டு மகிழ்ந்து அரசனே ஒரு நாள் அவனிடம், அடேய் நீ என்னருகில் வந்து அமர்ந்து கொள், அதில் தவறு எதுவும் இல்லை. நீயும் நானும் சமம் என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது சமையற்காரன் அரசனின் அருகில் சென்று அமர்வதில் தவறில்லை.
சாதாரண மனிதன் , நான் அவனே” என்று சொல்வது நல்லதல்ல. அலை, தண்ணீரைச் சார்ந்தது, தண்ணீர் அலையைச் சார்ந்ததாகி விடுமா என்ன?
எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை. மனைவி, மக்கள், தாய், தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்குச் சேவை செய். அதே வேளையில் அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்து வைத்துக்கொள்.
பணக்கார வீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்டையே சதா நினைத்துக்கொண்டிருக்கிறது.
அவள் அந்தப் பணக்காரரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப்போலவே கவனிக்கிறாள். என் ராமன், என் ஹரி, என்றெல்லாம் அந்தக் குழந்தையை சீராட்டுகிறாள். இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தன்னுடையவர்கள் அல்ல என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.
...
ஆமை தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா?
தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது .
அது போல் இல்லறத்தில் உனக்குரிய எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை
..
இறைவனிடம் பக்தியை அடையாமல், .இல்லறத்தில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய்.
ஆபத்து, துன்பம், கவலை இவையெல்லாம் வந்து மோதும் போது மன உறுதியை இழப்பாய், அது மட்டுமல்ல. உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும்.
கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழத்தை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் பிசின் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அது போல் பக்தி என்ற எண்ணெய்ப் பூசிக்கொண்டு இல்லறத்தில் ஈடுபடவேண்டும்.
..
இந்த உலகம் ஒரு செயல்களம், செயல் புரிந்து கொண்டே சென்றால் ஞானம் உதிக்கிறது. இந்தக் காரியங்களைச்செய்., இவைகளைச்செய்யாதே, என்று குரு உபதேசிக்கிறார். வேலை செய்யச்செய்ய மனத்தில் உள்ள மாசுகள் மறைகின்றன. நல்ல டாக்டர் வாய்த்துவிட்டால், அவர் தரும் மருந்தை உட்கொள்ள, நோய் நீங்கி நாளடைவில் குணமடைவது போன்றது இது.
கடவுள் நம்மை ஏன் உலக வாழ்க்கையிலிருந்து விடுவிக்கவில்லை.?
நோய் குணமடையும் போது விடுவிப்பார்.
காமினீ- காஞ்சனத்தை அனுபவிப்பதில் நாட்டம் மறையும் போது விடுவிப்பார். ஆஸ்பத்திரியில் பெயரைப் பதிவு செய்து விட்டால் ஓடிப்போக முடியாது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வராமல் டாக்டர் விடுவிக்க மாட்டார்.
..
7 май 2021