குருதேவர் பிரம்ம ஞானத்தைப் பற்றிபேசத் தொடங்கினார்.
வித்யை மற்றும் அவித்யைக்கு அப்பாற்பட்டது பிரம்மம். அது மாயையைக் கடந்தது.
இந்த உலகில் வித்யா மாயை, அவித்யா மாயை இரண்டும் இருக்கின்றன. ஞானமும் பக்தியும் இருக்கின்றன. காமமும் பணத்தாசையும் இருக்கின்றன. உண்மை உள்ளது. உண்மையற்றதும் உள்ளது. நல்லது உண்டு. தீயதும் உண்டு. ஆனால் பிரம்மம் இவற்றால் தொடப் படாதது. நல்லதும் தீயதும் உயிர்களுடன் தொடர்புடையவை. உண்மை- உண்மையற்றது எல்லாம் உயிர்களுக்கே. இவற்றால் பிரம்மத் திற்கு எதுவும் ஆவதில்லை. விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பாகவதம் படிக்கிறான். மற்றொருவன் திருட்டுக்கையெழுத்துப் போடுகிறான். ஆனால் விளக்கு இவற்றால் பாதிக்கப் படுவதில்லை. சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறான். தீயவர்களுக்கும் ஒளி தருகிறான்.
அப்படியென்றால் துன்பம், பாவம், அமைதியின்மை இவையெல்லாம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு விடை இது தான். இவையெல்லாம் உயிர்களுக்கே, பிரம்மம் இவை எவற்றாலும் பாதிக்கப் படுவதில்லை. பாம்பில் விஷம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்து விடுவான். ஆனால் பாம்பிற்கு ஒன்றும் நேர்வதில்லை.
பிரம்மம் என்றால் என்ன என்பதைச்சொற்களால் விளக்க இயலாது. எல்லாப் பொருட்களும் எச்சிலாக்கப் பட்டு விட்டன. வேதம், புராணம், தந்திரம், ஆறு தரிசனங்கள் எல்லாம் எச்சிலாகி விட்டன. நாக்கால் தீண்டப் பட்டு விட்டன. வாயால் சொல்லப் பட்டுவிட்டன. அதனால் எச்சிலாகி விட்டன. ஆனால் ஒன்று மட்டும் எச்சிலாக வில்லை. அது தான் பிரம்மம். பிரம்மம் என்பது எது என்பது இன்றுவரை யாராலும் சொல்லப் படவில்லை.
வித்யாசாகர்-(நண்பர்களிடம்)
ஆஞ இது ஓர் அற்புதக் கருத்து. இன்று ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள் பிரைம்ம வித்யை பயில்வதற்காக இருவரையும் ஆசிரியரிடம் அனுப்பினார் தந்தை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்தார்கள். வந்து தந்தையை வணங்கினார்கள். அவர்களுக்கு எந்த அளவிற்கு பிரம்ம ஞானம் உள்ளது என்பதை அறிய விரும்பினார் தந்தை. மூத்தவனைப் பார்த்து, மகனே!நீ எல்லாவற்றையும்படித்திருக்கிறாய் அல்லவா, பிரம்மத்தைப் பற்றி சொல்” என்றார். அவன் வேதத்திலிருந்து பல்வேறு சுலோகங்களை ஒப்பித்து பிரம்மத்தை விளக்க முயன்றான். தந்தை மௌனமாக அமர்ந்திருந்தார். இளைய மகனிடமும் அதே கேள்வியைக்கேட்டார்தந்தை. அவனோ தலை குனிந்து அமைதியாக நின்றான். அவனது வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. இதைக் கண்ட தந்தை மகிழ்ச்சியுடன் இளைய மகனிடம், மகனே! நீ தான் ஏதோ சிறிது தெரிந்து கொண்டிருக்கிறாய். பிரம்மம் எது என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது” என்றார்..
பிரம்மத்தை அறிந்து விட்டதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். எறும்பு ஒன்று சர்க்கரைக் குன்றிற்குச் சென்றது.ஒரே ஒரு பொடி அதன் வயிற்றை நிரப்பி விட்டது. மற்றொரு பொடியை வாயில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கித் திரும்பியது.போகும் போது அது தனக்குள்ளே” அடுத்த முறை வந்து சர்க்கரைக் குன்றையே தூக்கிச் செல்வேன்” என்று எண்ணிக் கொண்டது. சாதாரண மனிதர்கள் இப்படியெல்லாம் தான் நினைக்கின்றனர். பிரம்மம், வாக்கிற்கும், மனத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை அவர்கள் அறிவதில்லை. யாராக இருந்தாலும் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் பிரம்மத்தைப் பற்றி அவன் என்னதான் அறிந்து விடுவான்! சுகதேவர் போன்றோர் சற்று பெரிய எறும்புகள்- மிஞ்சிப்போனால் எட்டு பத்து பொடிகளைத் தான் கொண்டு வந்திருப்பார்கள், அவ்வளவு தான்.
ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளதே, அது எப்படி தெரியுமா? ஒருவன் கடலைப் பார்த்து விட்டு வந்தான். அவனிடம் ஒருவன், கடல் எப்படி இருந்தது? என்று கேட்கிறான். மற்றவன் வாயை ஆவென்று திறந்து, ஆ, அதை என்னவென்று சொல்வேன்! அப்பப்பா! எவ்வளவுபெரிய அலைகள்! எப்பேர்ப்பட்ட பயங்கர ஓசை! என்று சொல்வான். பிரம்மத்தைப் பிற்றி சொல்லப் பட்டிருப்பது இப்படித்தான். அவர் ஆனந்தமயமானவர், சச்சிதானந்த வடிவினர் என்று வேதங்கள் கூறுகின்றன.
சுகர் முதலான மகா முனிவர்கள் பிரம்மமாகிய கடலின் கரையில் நின்று கொண்டு அதைப் பார்த்தார்கள். தொட்டார்கள். ஒரு சிலரின் கருத்துப் படி அவர்கள் அந்தக் கடலில் இறங்கவே இல்லை. அதில் இறங்கினால் மீண்டு வர வழியில்லை.
சமாதி நிலையில் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது. அந்த நிலையில் சிந்தனை முற்றிலுமாக நின்றுவிடுகிறது. மனிதன் மௌனியாகி விடுகிறான். பிரம்மம் என்றால் என்ன என்பதை விளக்கி க் கூறும் ஆற்றல் அவனுக்கு இருப்பதில்லை.
உப்புப் பொம்மை ஒன்று கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது.( எல்லோரும் சிரித்தனர்) கடலின் ஆழம் எவ்வளவு என்று எல்லோருக்கும் சொல்ல அது ஆசைப் பட்டது. அதனால் சொல்ல முடியுமா? இறங்கியதும் கரைந்து விட்டதே! யார் வந்து கடலின் ஆழத்தைச் சொல்வது?
ஒரு பக்தர்-
சமாதியில் பிரம்ம ஞானத்தை அடைந்த மனிதனால் பேச முடியாதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சங்கராச்சாரியார் மக்களுக்கு போதிப்பதற்காக வித்யை- நான்- உணர்வை வைத்திருந்தார். பிரம்ம தரிசனம் கிடைத்தால் மனிதன் மௌனியாகி விடுகிறான். தரிசனம் பெறாத வரையில் தான் பேச்சும் ஆராய்ச்சியும் எல்லாம்.
வெண்ணெயை உருக்கும்போது, அது பக்குவமாகும் வரை உஸ் என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். உருகி நெய்யாகிய பின் ஓசை வருவதில்லை. அதில் பூரி தட்டிப்போட்டால் மீண்டும் உஸ் என்று சத்தம் எழும். பூரி பொரிந்து பக்குவமானதும் ஓசை நின்றுவிடும். அது போல் சமாதி நிலையை அடைந்தவன் பிறருக்குப் போதிப்பதற்காக கீழே இறங்கி வருகிறான், பேசுகிறான்.
தேனீ, பூவில் உட்காராத வரை ரீங்காரமிடுகிறது. பூவில் அமர்ந்து தேனைப் பருகத் தொடங்கியதும் மௌனமாகி விடுகிறது. தேனைக் குடித்த வெறியில் சில வேளைகளில் மறுபடியும் ரீங்கார மிட ஆரம்பிக்கிறது.
12 май 2021