சுழுமுனை வழியாக
......................
அதன் பிறகு சுவாமிஜி சுத்தானந்தரிடம் நூல் நிலையத்திலிருந்து சுக்ல யஜுர் வேத சம்ஹிதையைக்கொண்டு வருமாறு கூறினார். அவர் கொண்டு வந்ததும் அதிலிருந்து ஸுஷும்ண., ஸுர்ய ரச்மி, என்று தொடங்குகின்ற பகுதியை வாசிக்கச்சொன்னார். பிறகு அந்த மந்திரத்திற்கு மஹுதரர் எழுதியுள்ள விளக்கத்தைப் படிக்கச் சொன்னார். அதனைப் படித்த போது சுவாமிஜி, இந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை.ஸுஷும்ண என்ற வார்த்தைக்கு இந்த ஆசிரியர் எந்த விளக்கத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். எனக்கு என்னவோ, பின்னாளில் தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்ற ” சுழுமுனை நாடி” என்ற கருத்தின் விதை இங்கே இருப்பதாகத்தோன்றுகிறது. நீங்கள், என் சீடர்கள் சாஸ்திரங்களுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்க வேண்டும்” என்றார்.
சுவாமிஜி படித்த மந்திரம் இது.
கந்தர்வனின் உருவத்தில் இருக்கும் சந்திரனே சுழுமுனை.வேள்விகள் செய்பவர்களுக்கு அவனே இன்பத்தை வழங்குகிறான். அவனது கதிர்கள் சூரியக் கதிர்கள்போல் உள்ளன. அந்தச் சந்திரன் பிராமணர்களும் ஷத்திரியர்களுமாகிய எங்களைக் காக்கட்டும்! நாங்கள் எங்கள் ஆஹுதிகளை அவனுக்கு அளிக்கிறோம். அவனது அப்ஸர தேவதைகளே நட்சத்திரங்கள். அவர்கள் ஒளிரச் செய்பவர்கள். அவர்களுக்கும் எங்கள் ஆஹுதிகளை அளிக்கிறோம்.
மஹுதரரின் பொருள் என்னவோ! சுவாமிஜி உணர்ந்தது என்னவோ! ஆனால் அவர் சுழுமுனை என்று கூறியதிலிருந்து ஒன்று தெளிவு- அவர் யோகிகளின் பாதையில் அந்தச் சுழுமுனை வழியாக தமது பிராணனை விடுவதற்குச் சித்தமாகி விட்டார்.!
பொதுவாக மதிய உணவை சுவாமிஜி தமது அறையிலேயே உண்பார்.ஆனால் அன்று வந்து அனைவருடனும் அமர்ந்து உண்டார். சாப்பிடும் போதும் வேடிக்கை வினோதங்கள் பேசி அனைவரையும் மகிழச் செய்தார்.நேற்று ஏகாதசி விரதம் இருந்ததால் இன்றுபசி அதிகமாகி விட்டது. பானை சட்டிகளை விட்டு வைத்தாலே போதும் என்று தோன்றுகிறது” என்றார். சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, வழக்கத்திற்குச் சுமார் அரை மணிநேரம் முன்பாக சம்ஸ்கிருத வகுப்பு நடத்தத் தொடங்கினார். தாமே பிரம்மச் சாரிகளின் அறைக்குச்சென்று அவர்களை அழைத்து வந்தார். தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரம் வரதராஜர் எழுதிய ”லகு ஸித்தாந்த கௌமுதி” என்ற சம்ஸ்கிருத இலக்கண நூலைக் கற்பித்தார். அதையும் இடையிடையே வேடிக்கைக் கதைகள் கலந்து கற்பித்து பிரம்மச் சாரிகள் யாரும் சோர்வடையாதபடி பார்த்துக் கொண்டார். இப்படி வேடிக்கையைக் கலந்து, தம் நண்பனாகிய தாசரதி சன்யாலுக்குத் தாம் ஒரே நாளில் ஆங்கில வரலாற்றைக் கற்பித்தது பற்றி கூறினார்.
...
நன்றாக இருக்கிறேன்
...................
மாலை சுமார் 4 மணி. இளம் சூடான பாலும் தண்ணீரும் சாப்பிட்டார். பிறகு பிரேமானந்தருடன் ஒரு மைல் தூரம் பேலூர் கடைத்தெரு இருந்த திசையில் நடந்தார். வழியில் ஒரு தோட்டம் கவனிப் பாரற்ற நிலையில் கிடந்தது. அதைக் கண்டு, அமெரிக்காவில் ரிஜ்லிமேனரில் உள்ள தோட்டம் எவ்வளவு தூய்மையாக, அழகாகப் பராமரிக்கப் படுகிறது என்பதைக் கூறினார். எந்திரங்கள் அதிகம் இருப்பதால் ஆட்கள் அதிகம் தேவையில்லை என்பதை எடுத்துக் காட்டினார். பின்னர் வேதக் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்ற தமது திட்டத்தை க் கூறினார். அப்போது பிரேமானந்தர், வேதங்களைப் படிப்பதால் என்ன நன்மை?என்று கேட்டார். மூட நம்பிக்கைகள் ஒழியும்” என்று பதிலளித்தார் சுவாமிஜி. வேதங்கள் பற்றிய நூல்களை வாங்குவதற்காக முந்தினநாள் தான் அவர் பம்பாய்க்கும் பூனாவிற்கும் கடிதங்கள் எழுதியிருந்தார். பிறகு மனித நாகரீகங்களின் வளர்ச்சி பற்றி பேசினார். எல்லா நாடுகளின் வரலாறுகளிலிருந்தும் உதாரணம் காட்டினார்.
மாலை சுமார் 5.30 மணி. இருவரும் மடத்திற்குத் திரும்பினர். பின்னர் சுவாமிஜி ஐரோப்பா நாகரீகம் பற்றி பேசினார். அந்த நேரத்தில் மாலை ஆரதிக்கான மணி அடித்தது. பிரேமானந்தர் பூஜை செய்வதற்காகச் சென்றார். சுவாமிஜி சிறிது நேரம் ஈசுவர சந்திரருடன் பேசிக் கொண்டிருந்தார். கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்குச் சேவைகள் செய்து வந்தார். அவரிடம், சுவாமிஜி, இன்று என் உடம்பு மிகவும் லேசாக இருக்கிறது. இன்று நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறினார்.நேராக மாடியில் தமது அறைக்குச் சென்ற அவர் தமது ஜபமாலையைக் கொண்டு வருமாறு விரஜேந்தரிடம் கூறினார். பின்னர் அவரிடம் வெளியில் அமர்ந்து தியானம் செய்யுமாறு கூறிவிட்டுத் தாமும் தியானத்தில் அமர்ந்தார். வழக்கத்திற்கு மாறாக அன்று அவர் வடமேற்கு நோக்கி அமர்ந்தார்.
மறைகிறார்!
...................
சுமார் 6.30 மணி. சீடரைக் கூப்பிட்டு உஷ்ணமாக இருப்பதாகவும் அறையின் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் திறந்து விடுமாறும் கூறினார். அப்போது அவரது கையில் ஜபமாலை இருந்தது. பிறகு அவர் தமது தலையில் சற்று விசிறுமாறு கூறினார். சிறிது நேரம் வீசியதும், போதும், இனி வீசத் தேவையில்லை. என் கால்களைச் சற்று பிடித்து விடு” என்றார். சீடர்கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும்போதே சுவாமிஜி லேசாகத் தூங்கியது போல் தோன்றியது.
சுவாமிஜி இடது பக்கமாகப் படுத்திருந்தார். நேரம் கழிந்தது. ஒரேயொரு முறை திரும்பி வலது பக்கமாகப் படுத்திருந்தார். திடீரென்று அவரது கைகள் ஒரு முறை நடுங்கின. கனவு கண்ட குழந்தை மெல்லிய குரலில் அழுவது போல் சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தார்.அவரது தலை தலையணையில் துவண்டது. மீண்டும் ஒரு முறை அதே போல்ஆழ்ந்து மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்தம்! மணி சுமார் 9.
சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்ததாக நினைத்தார் விரஜேந்திரர். இருப்பினும் சற்றே கவலையுடன் கீழே ஓடி அத்வைதானந்தரை அழைத்து வந்தார். அந்த வேளையில் இரவு உணவிற்காக மணி அடித்தது. அனைவரும் வந்து சுவாமிஜியைப் பார்த்தனர். அத்வைதானந்தர் சுவாமிஜியின் நாடியைப் பரிசோதித்தார். அவருக்கு எதுவும் புரியவில்லை.
21 апр 2021