பள்ளிக் காலத்திலேயே நா பா வின் நாவல்களை விழுந்து விழுந்து வாசித்தேன். குறிஞ்சி மலர் வாசித்து விட்டு வாய் மூடாமல் என் சகோதரியுடன் விவாதித்து இருக்கிறேன். அரவிந்தன் பூரணி என்னும் இலட்சிய காதலர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் நீர் உகுக்கும்படி இருக்கும். பின்னர் ஒரு பொழுது பாண்டியன் விரைவு வண்டியில் நான் மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்த பொழுது, திருச்சி சந்திப்பில் நா பா என் பெட்டி நடத்துநரிடம் காலி இடம் இருக்கிறதா என்று கேட்க, விவஸ்தை கெட்ட நடத்துநர் தலையைக் குழுக்கிவிட்டுப் போய் விட்டதைப் பார்த்த போது, மனம் வலித்தது. பின்னர் ஒரு முறை, மேற்கு சி ஐ டி நகரில் நான் ஐ ஏ எஸ் பயிற்சி நிலையத்தில் தங்கிப் பயின்று வந்த போது, அவர் தனது வீட்டிற்கு ஆட்டோ ஒன்றில் வந்த போது கண்டிருக்கிறேன். பின்னர் ஒரு காலத்தில் அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் எங்கள் பக்கத்துக்காரர் என்று அறிந்த போது மிகவும் பெருமையாக இருந்தது.