திருமுறை 1 திருஞானசம்பந்தர் தேவாரம் பதிகம் - 73 தலம் - திருக்கானூர் (தஞ்சாவூர் மாவட்டம்) பண் :தக்கேசி பாடல் எண் : 8 தமிழினீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார் குமிழின்மேனி தந்துகோல நீர்மை யதுகொண்டார் கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே. பொழிப்புரை : மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது (சம்பந்த நாயகி) இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.
பவள வண்ணரே என்று எவ்வளவு ரசித்து பாடுகிறார்கள். மாலை நேரத்தில் வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் பவள வண்ணரே என்று நீங்கள் பாடுவது தான் நினைவுக்கு வருகிறது. அட அட என்ன அருமையான ராகத்தில் ரசித்து பாடுகிறீர்கள். வாழ்க வளத்துடன். திருசிற்றம்பலம்
Om Namashivaya. Excellent and divine rendition by both the kids with whole hearted dedication with the blessings of the Lord Shri. Karumbeeswarar at Thirukanoor 🙏
நாவுக்கரசரின் மாதர் பிறை கண்ணியானை பாடலில் 7வது பாடலில் வடிவோடு வண்ணம் இரண்டையும் பாடி எனக் கூறியிருப்பார் அப்பர் அடிகள். அது என்ன வண்ணம் என்று நான் யோசித்த போது என் நினைவிற்கு வந்தது இந்த "பவள வண்ணரே" என்ற மிக அழகான சொற்றொடர். சகோதரிகள் பாடிக் கேட்டு எனக்கு நன்கு மனதில் பதிவிட்டிருந்தது. கானூர் மேய பவள வண்ணரே. அட அட என்ன அழகாக வண்ணரே என்று உச்சரித்து பாடுகிறார்கள். அருமை அருமை. தங்கள் பணி என்றென்றும் தொடர மனமார வேண்டிக் கொள்கிறேன். திருச்சிற்றம்பலம்
இரண்டாம் மற்றும் ஈற்றடியை மிக அழகாக பாடியுள்ளனர். இப்பாடலில் ஒரு இலக்கண குறிப்பு கவனிக்க தக்கது. பாடலை அனுபவித்த பின்பே இந்த இலக்கண குறிப்பை கவனிக்க வேண்டுகிறேன். 'தமிழினீர்மை" என்பதற்கு "தமிழ் போன்று இனிக்கும் இனிய வார்த்தைகள்" என்று உரை உள்ளது. இந்த உரைக்கான காரணத்தை சிந்தித்ததில் எனக்கு தோன்றியதை பதிவிடுகிறேன். "தமிழின்" என்பதில் உள்ள "இன்" என்ற சொல் ஐந்தாம் வேற்றுமை உருபு. ஐந்தாம் வேற்றுமை உருபுகள்: இன், இல். இவை ஒப்பு (உவமை), எல்லை, ஏது, நீங்கல் ஆகிய நான்கு பொருள்களில் வரும். "தமிழின்" என்பதில் உள்ள 'இன்' என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு ஒப்பு (உவமை) பொருளில் வந்துள்ளது.எனவே, "தமிழின்" என்பதில் உள்ள "இன்" என்ற சொல்லிற்கு "போன்ற" என்று உரை உள்ளது போலும்.
தோணிபுரத்து இறைவன் பால் தீராத காதல் கொண்டுள்ள நம் ஞானசம்பந்தர், தன்னை ஒரு பெண்ணாக பாவித்தும், சிவபெருமானை தலைவராக பாவித்தும் தனது நிலையினை, பெருமான் பால் தான் தீராத காதல் கொண்டு அவனுடன் இணையமுடியாமல் ஏங்கும் நிலையினை, பெருமானுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் அமைந்த பல பதிகங்களில் இது ஒன்று. இதில் நாம் ஞானசம்பந்தரை சம்பந்த நாயகி ஆகக் கொள்ள வேண்டும். ஆகா என்ன அழகாக பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் பெருமான் எவ்வளவு உருகி பாடியிருப்பாரோ அதே போன்று தான் உருகி, ரசித்து பாடுகிறார்கள். இப்பாடலை இவர்கள் பாடிக் கேட்டு பார்ப்பது பேரானந்தத்தைத் தருகிறது. மிகவும் பரவசமாக இருக்கிறது. இவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு துள்ளலுடனும், உற்சாகத்துடனும் தான் நான் இப்பாடலைக் கேட்டு மகிழ்கிறேன். நன்றி நன்றி. இரு சகோதரிகளும் மற்றொரு கையைத் தூக்கி ஆகா என்ன அருமையான வரிகள் என்று ரசிப்பது போல் செய்வது உண்மையிலேயே எனக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் சசினிக்கு இப்பாடல் மிக மிக பிடித்தம் போல. வேறு எந்த ஒரு பாடலிலும் இல்லாத வகையில் மற்றொரு கையை நன்கு அசைக்கிறார். ஈசா கையை அசைப்பது மட்டுமல்லாமல் கண்களை மூடி நன்கு ரசித்து பாடுகிறார். அருமையோ அருமை கண்மணிகளே. கீழே comments sectionஇல் தினேஷ் குமார் என்பவர் தமிழும், இசையும், இறைவனும் ஒன்று தான் எனக் கூறியது உங்களுக்கு அருமையாக பொருந்தும். தமிழை ரசித்து, இசையை சுவாசித்து இறைவனை பூசிக்கிறீர்கள். நேற்று கார்த்திகை 2ம் சோமவாரத்தன்று தான் இப்பாடலைக் கேட்டேன். பவள வண்ணரே என்று பாடிக் கொண்டே சோமவார பூசைக்காக (என் புகுந்த வீட்டில் பராமரிக்கப்படும் பக்தி கணபதி கோயிலுக்காக) பூக்களை பறிக்க வெளியே சென்றேன். என்ன ஆச்சரியம். மாலை மங்கும் நேரம் வானம் செக்கச் செவேர் என்று இருந்தது. எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது. ஆம் சிவபெருமான் தான் அங்கு பவள வண்ணராக காட்சியளிப்பது போல இருந்தது எனக்கு. பாடலை பாடிக் கொண்டே, பவள வண்ண வானத்தை ரசித்துக் கொண்டே, சிவனுக்கு பூசைக்கான மலர்களை பறித்தேன். இந்தப் பேரானந்த அனுபவத்தைக் கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. நன்றி நன்றி. திருக்கானூர் செம்மேனிநாதர் (அதான் நீங்கள் பவள வண்ணரே என்று ரசித்தீர்களே) உங்களுக்கு அருள் புரியட்டும். திருசிற்றம்பலம்.
திருமுறைகளை பேணியும் போற்றியும் தொடர்ந்தும் உற்சாகம் அளித்து வரும் தங்களுக்கு அடியோமின் தாழ்மையான வணக்கங்கள் அம்மா. மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
இன்று அபிராமி பட்டரின் தை அமாவாசை க்கு பிந்தைய மூன்றாம் பிறையைக் காணும் (13.02.2021 6.45 pm) அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கூடவே பவள வண்ணரே என்று நீங்கள் நெக்குருகி பாடிய சிவனாகிய பவள வண்ணரின் தரிசனம் மூன்றாம் பிறையோடு எனக்கு இன்று கிடைத்தது. ஆகா எவ்வளவு அற்புதமாக இருந்தது எனக்கு. தங்களுடைய இந்தப் பாடலைத் தான் திரும்பத் திரும்ப நான் பாடிக் கொண்டிருந்தேன். இக்காட்சியை பதிவு பண்ணி தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதோ லிங்க் இங்கே. photos.app.goo.gl/Z5K19dHcNonBrr4w7 தங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் இப்பாடலை மிக அழகாக பாடி பதிவு செய்தமைக்கு.