திருச்செந்தூர் திருப்புகழ்
சுருக்கம்: உயிர் மங்கும் தருவாயில், மயில் மீது வந்து காத்தருள வேண்டல்
தொந்தி சரிய மயிரே வெளிர நிரை
தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகை ஆடி
வயிறு சரியவும் , மயிர் வெளுத்துப் போகவும், வரிசையாக இருந்த தந்தம் பற்கள் அசையவும், முதுகு வளையவும், உதடு தொங்கிப் போகவும், ஒரு கை தடி மேல் வரவும், பெண்கள் பரிகாசச் சிரிப்புச் சிரிப்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது .
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல்
கிண் கிண் என முன் உரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி
பெருங்கிழவன் இவன் யார் என்று பேசவும், இருமல் கிண் கிண் என்று முன்னே (ஓலிக்க), பின்னே சொற்கள் குழறவும், கண்கள் (ஒளி) சோர்வுபட்டு குருட்டு நிலை அடையவும், காதுகள் செவிட்டுத்தன்மையை அடையவும்.
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு
பண்டிதனுமே உறு வேதனையும் இள
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி
வந்த நோய்களும், அது சம்பந்தமாக அடிக்கடி வந்து போகும் வைத்தியனும், உடல் படுகின்ற வேதனையும் (ஒரு பக்கம் இருக்க) , (மற்றொரு பக்கத்தில்) பிள்ளைகள் சொத்து எவ்வளவு, கடன் எவ்வளவு என்று விடாது கேட்க துயரம் கொண்டு.
மங்கை அழுது விழவே யம படர்கள்
நின்று சருவ மலமே ஒழுக உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும்
என் மனைவி ஓவென்று கதறி அழவும், யமதூதுவர்கள் நின்று என் உயிரைப் பற்றுமாறு வந்து நெருங்கி நிற்க (அதனால்) மலம் தண்ணீர் போல் ஒழுகி, என் உயிர் பிரியும் போது (அந்த சமயத்தில்) விரைந்து மயில்வாகனத்தில் விரைந்து வந்து அருள் புரிய வேண்டும்
எந்தை வருக ரகு நாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராமா
என் அப்பாவே வருக, ரகு நாயகனே வருக, மைந்தனே வருக மகனே இனி வருக, என் கண்ணே வருக, எனது ஆருயிரே வருக, அழகனே.
இங்கு வருக அரசே வருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல வரு(ம்) மாயன்
இங்கே வருக, அரசே வருக, பால் குடிக்க வருக, பூ சுடிக் கொள்ள வருக என்றெல்லாம் அன்புடன் கோசலை கூறியவுடன் இராமனாக வந்த மாயாசொரூபி திருமால்.
சிந்தை மகிழும் மருகா குறவர் இள
வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை
சிந்த அசுரர் கிளை வேரொடு மடிய அடு தீரா
மனம் மகிழும் மருகனே, குறவர்களுடைய இளங் கொடியாகிய வள்ளியை அணையும் அழகனே, தேவர்கள் சிறையினின்றும் வெளியேற, அசுரர்கள் வேரொடு மடிய போரிட்டு அழித்த வீரனே.
திங்கள் அரவு நதி சூடிய பரமர்
தந்த குமர அலையே கரை பொருத
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே.
நிலவையும், பாம்பையும், கங்கையையும் சடையில் தரித்த, மேலானவராகிய
(சிவபெருமான்) அருளிய குமாரனே, கடல் அலைகள் கரையில் மோதுகின்ற திருச்செந்தூரில் இனிதே வசிக்கும் பெருமாளே.
இந்த பாடலில் முருகனிடம், உயிர் பிரியும் பொழுது வந்து காட்சி அருளவேண்டும் என்ற முறையீட்டுடன், முருகன் தன்னை எவ்வாறு ஒரு தாய் தன் பிள்ளையை அரவணைப்பாளோ அதுபோல் தன்னையும் அரவணைக்க வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீராமபிரானின் உவமையை எங்கு குறிப்பிட்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது
பொழிப்புரை மேற்கோள் உதவி : முருகவேள் பன்னிரு திருமுறை - பாகம் 1 எழுதியவர்: தணிகைமணி Dr வ. சு. செங்கல்வராயன்
16 окт 2024