பாடியவர்:ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
ராகம்: பூர்வி கல்யாணி
தாளம் : ஆதி
நமது பெரியவர்கள் எத்தனையோ பாடல்களை செவி வழியாக கற்றுக் கொண்டு அடுத்த தலை முறை குழந்தைகளுக்கு அழகாக சொல்லி கொடுத்தும் இருக்கிறார்கள்.
சில சமயம் நம்ம வீட்டு பெரியவர்கள் இந்த மாதிரி சொல்லும் போது நாம் நம்ம ஆத்து பெரியவா தானே மெதுவா கேட்டு வாங்கி கொள்ளலாம் என்று இருந்து நிறைய நல்ல விஷயங்களை தவர விட்டு விடுகிறோம்.
எங்க ஆத்துக்கு பக்கத்தில் உள்ள திருபுர சுந்தரி பாட்டி (வயது 87 )உனக்கு ஒரு பாட்டு தரேன் என்று எழுதி கொடுத்தார்.
பாட்டிக்கு மாயவரத்தில் செல்லம்மா என்பவர் கற்றுத் தந்ததாக சொன்னார்
பார்த்தால் மிக அருமையான காரடையான் நோன்பு பாடல்.
நோன்பு சமயத்தில் பாட்டி என்னை கூப்பிட்டு கொடுத்தது மிகப்பெரிய ஆசிர்வாதமாக தோன்றியது.
பாட்டியோட பரிபூர்ண ஆசீர்வாதத்தால் நமது பாக்கியத்தாலும் இந்த பிரார்த்தனை பாடல் அரங்கேறி உலகெங்கிலும் உள்ள மாதர் குலத்தை இந்த காரடையான் நோன்பு தினத்தில் ஒரு சேர பிரார்த்திக்க வைக்க பிராப்தம் கிட்டியது என்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.🙏
சதுர் முகநாரோடு சரஸ்வதி தாயே
தாழ்வில்லா எந்தனுடன் நாவில் வாழம்மா
பரிபூரண பஞ்சாக்ஷரி பரமதயாபரி
மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா எனக்கு திடமான
மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
மாதாவே தாயாரே பார்வதி தேவியே
மன்னார் கோவில் மாதவன் ப்ராண நாயகியே
ஆதாரம் நீ யொழிய எனக்கு வேறில்லை
என மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா எனக்கு திடமான மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
தத்துவத்துக்குள் பொதிந்த சங்கரியாளே
ஸர்வாளை ரக்ஷித்து ஆதரிப்பவளே
பொற்கொடியே தாயே பொற்பதமே நீயே
மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா
எனக்கு திடமான மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
கொத்தளநீர் செவ்விளநீர் கொங்கையுள்ளவளே
கோலமுள்ள கைலாசர் ப்ராண நாயகியை
தேன் ரசமானவளே
வாவென்றழைத்தேன்
மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா
திடமான மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
ஆறு ஜடை மேலிருக்கும் அலங்காரியே
அஞ்சு தலை நாகம் பூண்டு ஆடும் தேவியே
மயிற்கொழைய முடியாளே மனோன்மணியே
மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா
எனக்கு திடமான மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
குன்றாத மாங்கல்யம் தருவாய் நீயே
கோலமுடன் கைலாச வாஸ நாயகியே
அன்புடனே மாங்கல்ய பிக்ஷையிடம்மா அம்மா
அடிக்கழுத்தில் மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மாதாவே எனக்கு திடமான மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
மாதாவே மாங்கல்ய பிக்ஷை சூலத்தில்
மகிமையுடன் சொன்னவர்க்கும் கேட்டவர்க்கும்
வாழ்வுண்டாம் அமுதுண்டாம் மஞ்சளுமுண்டாம்
மஹாதேவர் பாதத்தில் பக்தியுமுண்டாம்
காலங் கடுகி யமதூதர் வந்தாலும்
மனம் கலங்காத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மங்களம் ஜய மங்களம்
ஜய மங்களம் நித்திய சுப மங்களம்
12 мар 2024