ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி
பாடியவர் - திருமதி கல்யாணி சுந்தரேசன்
முதல் திருவாய்மொழி - ‘உயர்வற’
1
உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.
பொழிப்புரை : என் மனமே, தேவர்கள் முதலிய மற்றையோருடைய மேன்மைகள் முழுதும் இல்லை என்று கூறலாம்படி மேன்மேல் உயர்ந்துகொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் யாவனோ அவன், என்னிடத்துள்ள அறிவின்மையாவும் நீங்க, பக்தியின் நிலையை அடைந்த அறிவைத் தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ அவன், மறதி என்பது சிறிதும் இல்லாத நித்தியசூரிகட்குத் தலைவன்; அந்நித்தியசூரிகட்குத் தலைவன் யாவனோ அவனுடைய, எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலினின்றும் கரை ஏறுவாய்.
விசேடக்குறிப்பு : ‘யவன்’ என்பது ‘யாவன்’ என்ற சொல்லின் விகாரம். மனன் - மனம்; மகரத்திற்கு னகரம் போலி என்பர்.
----------------------------------------------------
உளன் எனில் உளன் அவன்
உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் , அவன்
அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை
குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு
ஒழிவு இலன் பரந்தே
பதவுரை
உளன் எனில் - ஈஸ்வரனுண்டென்று ( வைதிகர்கள் சொல்லுகிறார்போல்) சொன்னாலும்
உளன் அலன் எனில் - ஈஸ்வரனில்லையென்று ( நாத்திகர்கள் சொல்லுகிறார்போல்) சொன்னாலும்
உளன் - ஈஸ்வரனுண்டு என்பதாகவே தேறும்.
அவன் உருவம் அவன் அருவம் -
அப்பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்.
விளக்க உரை
இறைவன் உளன் என்றால் உள்ளவன் ஆவான். அப்பொழுது உருவத்தோடு இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய தூல சரீரமாகும்.
இறைவன் இலன் என்றாலும் உள்ளவனே ஆவான். அப்பொழுது உருவம் இல்லாதனவாய் இருக்கும்
இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய சூட்சும சரீரமாகும்.
ஆதலால் உளன் என்றும் இலன் என்றும் கூறப்படும் இவற்றைக் குணமாகவுடைமையின், உருவமும் அருவமும் ஆன தூல சூக்கும பொருள்கள் உடையவனாய் எங்கும் ஒழிவு இல்லாதவனாகிப் பரந்து இருக்கின்றவனே ஆவான் என்பதாம்.
12 сен 2024